

தமிழக அரசு இன்று காலை அறிவித்த மகளிர் உரிமைத் தொகை ரூ. 5 ஆயிரம் எடுக்க வங்கிகளில் அலைமோதும் பெண்கள் கூட்டத்தால் வங்கிகள் திணறி வருகின்றனர்.
தமிழக அரசு பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்திற்கான மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைக் கடந்தாண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த தினத்தில் அறிவித்துத் தொடர்ந்து தற்போது வரை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முடக்க பல்வேறு சதிகள் நடப்பதாகக் கூறி இன்று காலை 7 மணியளவில் திடீரென தமிழக முதல்வர் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் மூன்று மாதக்கால உரிமைத்தொகை முன்கூட்டியும், கோடைக்கால தொகையாக ரூ. 2,000 என ஒவ்வொருவருக்கும் 5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதால் மகளிர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இந்த மகளிர் உரிமைத்தொகை பணத்தை விரைந்து எடுக்காவிடில் திரும்பிவிடும் எனப் பொய் தகவல் அதிகளவில் கிராமப்புறங்களில் பரவியதால் கிராமப்புற வங்கிகளில் காலை 9 மணிக்கு முதலே பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தங்கள் வங்கிக் கணக்கு புத்தகம் மற்றும் ஏடிஎம் அட்டை உள்ளிட்டவைகளை எடுத்து வரிசையாக வங்கிகளிலும், சில வங்கிகளில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டும் பணத்தை எடுக்கக் காத்திருக்கின்றனர். மேலும், ஏடிஎம் மையங்களில் சிலர் தங்களது அட்டையைப் பயன்படுத்தத் தெரியாமல் பிறரை உதவிக்கு அழைக்கும் நிலையில், கடவுச்சொல் பாதுகாப்பின்மை கேள்விக்குறியாக உள்ளதை அறியாமல் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.