

புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக் கொண்டார்.
காரைக்காலில் இன்று நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
அப்போது பேசிய அவர், திருநள்ளாறு சனீஸ்வரர் பகவானையும், பத்ரகாளி அம்மனையும் தலைவணங்கி உரையை தொடங்குகிறேன் என்று கூறினார்.
உலகத்தின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்கு மன்னிப்பு கேட்கிறேன். இங்கு நான் வந்ததற்கு இரண்டு நோக்கங்கள் உள்ளது. மோடி - ரங்கசாமி ஆகியோர் தலைமையில் உள்ள புதுச்சேரியில் ஆட்சியில் என்ன நடந்துள்ளது என்பதே விவரிக்க வந்துள்ளேன். இரண்டாவது நோக்கம், முந்தைய ஆட்சியாளர்களின் முகத்திரையை கிழிக்க வந்துள்ளேன்.
புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டம் - ஒழுங்கை சீர் செய்துள்ளோம், வளர்ச்சிப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 44 சதவீத வாக்குகளை புதுச்சேரி மக்கள் அளித்தனர். வரும் 2026 தேர்தலில் 60 சதவீத வாக்குகளைப் பெற்று 24 இடங்களைப் பெறுவோம். புதுவையில் 24 தொகுதிகளை நமக்கானதாக மாற்றிக் கொள்வோம்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாள்தோறும் பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றியிருந்தது. இது குறித்து அவர்கள் வாய்திறக்க மாட்டார்கள்.
2019-ஆம் ஆண்டு புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஆனால், மோடி வந்த பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் மீது வான் வழித்தாக்குதல் நடத்தப்பட்டது. தற்போது ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்து அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் என்று கூறினார்.
தொடர்ந்து புதுச்சேரி பற்றி பேசிய அமித் ஷா, புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, நிலையான ஆட்சியை உருவாக்கியிருக்கிறோம். ஊழலை முடிவுக்குக் கொண்டு வந்து சுயமாக செயல்படும் அரசை உருவாக்கியிருக்கிறோம். புதுவையின் ஜவுளித் துறை புத்துயிர் பெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆட்சியில் புதிதாக ஒரு தொழில்கூட தொடங்கப்படவில்லை என்றார்.
மேலும், புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.