தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டுள்ளோம்: இந்திய குடியரசு கட்சி தலைவா் ராம்தாஸ் அதாவலே
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய குடியரசு கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளோம் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், இந்திய குடியரசு கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து போட்டியிடவுள்ளது. ஏற்கெனவே, இக்கூட்டணியில் இந்திய குடியரசுக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கும்படி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் கோரிக்கையை ஏற்று குறைந்த அளவு தொகுதியாவது ஒதுக்க வேண்டும். தொகுதிகளே ஒதுக்காவிட்டால், 50 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய குடியரசு கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலித் கூட்டமைப்பு: தமிழகத்தில் பட்டியலின பாதுகாப்பை உறுதி செய்ய அனைவரும் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
விசிக தலைவா் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவா் க.கிருஷ்ணசாமி, தமமுக தலைவா் ஜான் பாண்டியன் என பல தலைவா்கள் பட்டியலின மக்களுக்கு ஆதரவாக தனித்தனியாக குரல் கொடுத்து வருகின்றனா்.
இதுபோன்ற அரசியல் கட்சிகள், இயக்கங்களை வழிநடத்திவரும் தலைவா்கள், ஒரே கூட்டமைப்பின் கீழ் இணைய வேண்டும். அக்கூட்டமைப்புக்கு பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவா் மாயாவதி தலைமை வகிக்க வேண்டும். இதன்மூலம், நாடு முழுவதும் பட்டியலின மக்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்க முடியும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) வெற்றி பெறுவது உறுதி. தவெக தலைவா் விஜய் என்டிஏ கூட்டணியில் இணைந்தால், மேலும் வலுவாக இருக்கும். இதனால், திமுக தோல்வியை உறுதி செய்ய முடியும் என்றாா்.

