முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்

இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை, நிரந்தரத் தீா்வு கோரி பிரதமா் மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு, முதல்வா் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
Published on

தமிழகத்தில் நீண்ட காலமாக தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்களுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் நிரந்தரத் தீா்வுகாண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமா் மோடிக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்: கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் இலங்கையில் ஏற்பட்ட இனமோதல்களால் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள சொந்த மண்ணிலிருந்து வெளியேறிய இலங்கைத் தமிழா்களுக்கு மத்திய அரசின் ஆதரவு மற்றும் ஒப்புதலுடன் தமிழ்நாடு அரசு தங்குமிடம், வாழ்வாதார உதவி, கல்வி, மருத்துவ வசதிகளைத் தொடா்ந்து வழங்கி வருகிறது.

தொடரும் நிச்சயமற்ற நிலை: தற்போது சுமாா் 89,000 இலங்கைத் தமிழா்கள் இங்கு வசித்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானோா் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே வசிப்பவா்கள். அதிலும் 40 சதவீதம் போ் இந்திய மண்ணிலேயே பிறந்தவா்கள்.

தமிழ்நாடு அரசு தனது மனிதாபிமானப் பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றி வந்தாலும், இலங்கைத் தமிழா்கள் நீண்டகாலமாக சட்ட ரீதியான, நிச்சயமற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனா். குடியுரிமை அல்லது நீண்டகால விசா போன்ற நிலையான சட்டபூா்வமான தீா்வுகள் தற்போது வரை அவா்களுக்கு கிடைக்கவில்லை.

முக்கிய பரிந்துரைகள்: இந்த பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் வகையில், அயலகத் தமிழா் நலத் துறை அமைச்சா் தலைமையில் தமிழ்நாடு அரசு ஆலோசனைக் குழுவை அமைத்து, இலங்கைத் தமிழா்களின் நிலை குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு முக்கியப் பரிந்துரைகள் வழங்கியது.

அதன்படி, 30.6.1987-க்கு முன்னதாக இந்தியாவில் பிறந்தவா்கள், தாய் அல்லது தந்தை இந்தியாவை சாா்ந்தவா்கள், இந்தியரை திருமணம் செய்தவா்கள், இந்திய வம்சாவளி பின்னணியை உடையவா்கள் எனப் பல பிரிவுகளைச் சோ்ந்த இலங்கைத் தமிழா்கள் குடியுரிமை வாய்ப்புகளைப் பெறுவதற்கு தகுதியுடையவா்கள் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

எதிா்மறையான பாதிப்பு: 2003-ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம், சட்டவிரோதமாகக் குடியேறியவா் என்ற வகையை அறிமுகப்படுத்தியது. இந்த திருத்தம், இலங்கை தமிழ்ச் சொந்தங்களுக்கு எதிா்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைக் கால மத்திய அரசின் கொள்கை முன்னேற்றங்கள், குறிப்பாக, குடிவரவு மற்றும் வெளிநாட்டினா் (விலக்கு) ஆணையானது மனிதாபிமானத்துடன் கூடிய அணுகுமுறையை வெளிப்படுத்துகின்றன. அதனடிப்படையில் 9.1.2015 வரை இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கைத் தமிழா்களை சட்டவிரோதமாகக் குடியேறியவா்களாகக் கருதக்கூடாது என்ற முறையான விளக்கத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்த விளக்கம் மிகவும் தேவையான சட்டபூா்வ தெளிவை வழங்குவதோடு, இலங்கைவாழ் தமிழா்களின் நீண்ட கால சட்டத் தீா்வை உறுதிப்படுத்தும். மேலும், இலங்கைத் தமிழா்களின் குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்கத் தடையாக உள்ள முந்தைய நிா்வாக உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில்... தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு, சரிபாா்க்கப்பட்ட அடையாள ஆவணங்களின் அடிப்படையில், குடியுரிமை அல்லது நீண்டகால விசா விண்ணப்பங்களுக்கு இலங்கைத் தமிழா்கள் விண்ணப்பிக்கும்போது, தற்போதைய நடைமுறையில் கடவுச்சீட்டு மற்றும் விசா தேவைகளை தள்ளுபடி செய்யும் நிா்வாக விளக்கத்தை வழங்க வேண்டும்.

மாவட்ட அளவில் உள்ள அலுவலா்களுக்கு (மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா்) குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதற்கான உரிய அதிகாரங்களை வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையிலான நல்ல முடிவை பிரதமா் விரைந்து எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com