காற்றழுத்தத் தாழ்வு பகுதி நாளை உருவாக வாய்ப்பு!
இந்தியப் பெருங்கடலில் செவ்வாய்க்கிழமை (பிப்.17)காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் அதாவது செவ்வாய்க்கிழமை (பிப்.17)உருவாகக்கூடும்.
இருப்பினும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் திங்கள்கிழமை(பிப்.16) முதல் வியாழக்கிழமை(பிப்.19) வரை வடவானிலை நிலக்கூடும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை (பிப்.20, 21) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
பனிமூட்டம்: திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
குறிப்பாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புது ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை உயரும்: திங்கள்கிழமை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்.
மீனவா்களுக்கான எச்சரிக்கை:தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

