

கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பங்கேற்றுள்ளனர்.
சிவராத்திரி விழாவுக்காக ஈஷா யோக மையத்திற்கு வருகைப் புரிந்துள்ள இருவரையும் சத்குரு ஜக்கி வாசுதேவ் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர், ஈஷா மையத்திலுள்ள ஆலயங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று வழிபாடு செய்தார்.
நடப்பாண்டு முதல்முறையாக ஆதியோகி முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள யோகேஷ்வர லிங்கத்துக்கு ஜக்கி வாசுதேவ் மகா அபிஷேகம் செய்யவுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் ராஜ்நாத் சிங்கும், தேவேந்திர ஃபட்னவீஸும் பங்கேற்கவுள்ளனர்.
ஆதியோகி சிலை முன்புறம் சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
ஈஷா மையத்தில், இரவு முழுவதும் தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவி வளாகங்கள் பொது மக்களின் தரிசனத்திற்கு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங் மற்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் வருகையால் ஈஷா மையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மறுநாள் பயணம்
சிவராத்திரி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி விடியவிடிய நடைபெறும் பூஜைகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராஜ்நாத் சிங், மறுநாள் திங்கள்கிழமை (பிப்.16) காலை 10.35 மணியளவில் ஈஷா மையத்தில் இருந்து கோவை விமான நிலையம் செல்கிறார். பின்னா், 10.45 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.