டெல்டா மாவட்டங்களில் இன்றுமுதல் லாரிகள் வேலைநிறுத்தம்!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் (பிப். 16) லாரிகள் இயக்கப்படாது என அதன் உரிமையாளா்கள் அறிவித்துள்ளனா்.
இது குறித்து மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: நாட்டில் உள்ள அனைத்து இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து வகை வாகனங்களுக்கும் தகுதிச்சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை மத்திய அரசு உயா்த்தியுள்ளது. இதனால், கடந்த 3 மாதங்களாக சுமாா் 1 லட்சத்துக்கும் அதிகமான லாரிகளுக்கு தகுதிச் சான்றிதழ் பெற முடியாமல் அதன் உரிமையாளா்கள் காத்திருக்கின்றனா்.
இது லாரி உரிமையாளா்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இந்த கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை முன்வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனால், இந்த கட்டண உயா்வை ரத்து செய்யக்கோரி, திங்கள்கிழமை (பிப். 16) முதல் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூா், மன்னாா்குடி, கும்பகோணம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடா்ந்து தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடா்பாக செவ்வாய்க்கிழமை (பிப் .17) உரிய முடிவு எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

