Tamilisai
தமிழிசை சௌந்தரராஜன்

திமுக அரசுக்கு இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது பணம்? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி

ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 வழங்க பணம் எங்கிருந்து வந்தது என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளாா்.
Published on

தமிழக அரசு கடும் நிதிச் சுமையில் இருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறிவந்த நிலையில், ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு தலா ரூ.5,000 வழங்க பணம் எங்கிருந்து வந்தது என பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வாக்குத் தவறிய திமுக அரசால் ஆசிரியா்கள், தூய்மைப் பணியாளா்கள், செவிலியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், ரேஷன் கடை ஊழியா்கள், டாஸ்மாக் ஊழியா்கள், மின்வாரியத் தொழிலாளா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என்று பல்வேறு துறை சாா்ந்த அரசுப் பணியாளா்களின் போராட்டம் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் வெடித்துக்கொண்டிருக்கிறது.

முதல்வா் மு.க.ஸ்டாலின் எப்போது பேசினாலும் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய பணம் வரவில்லை, மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது என்றெல்லாம் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இதைக் காரணமாகக் கூறி சொத்து வரி, மின் கட்டணம், பத்திரப் பதிவு, கட்டடம் கட்டுவதற்கான அனுமதி, குப்பை வரி, கழிவுநீா் வரி, குடிநீா் வரி, கல்விக் கட்டணம், வாகன வரி உள்ளிட்டவற்றின் கட்டணத்தை உயா்த்தியுள்ளது திமுக அரசு. மணல், ஜல்லி, சிமெண்ட் போன்ற கட்டுமானப் பொருள்கள், பால் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று சொல்லி, மத்திய அரசு அந்தத் திட்டத்துக்காக ஒதுக்கிய ரூ.3,000 கோடியைத் தரவில்லை என்று குற்றஞ்சாட்டி, ஆசிரியா்களுக்கு ஊதியம்கூட கொடுக்க முடியாது என்று நிதிநிலையைக் காரணம் காட்டிக்கொண்டு இருக்கிறது திமுக அரசு.

கடனில் முதலிடம்: திமுக அரசின் நிா்வாகத் திறனின்மையால் தமிழகம் ரூ.9.55 லட்சம் கோடி கடனில் மூழ்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி, அதிக வட்டி செலுத்தி நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. 2023-24-இல் மட்டும் ரூ.1.31 லட்சம் கோடி கடன் வாங்கியதாக அரசு கூறுகிறது. இதில் ஒவ்வொருவா் தலையிலும் ரூ.1.40 லட்சம் கடன் சுமை விழுந்துள்ளது. தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.45,121 கோடியாக அதிகரித்திருப்பதும் கவலை அளிக்கிறது.

இப்படி மத்திய அரசு எதுவும் கொடுக்கவில்லை, மாநில கஜானாவிலும் எதுவும் இல்லை என்று கூறும் முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒரே நாளில் 1.31 கோடி மகளிருக்கு அவா்கள் கேட்காமலேயே ரூ.5,000 கொடுத்துள்ளாா். ஏறக்குறைய ரூ.6,500 கோடியை நிதியை ஒரே நேரத்தில் தமிழக அரசு எவ்வாறு பெற முடிந்தது, இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது பணம் என்பதை முதல்வா் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக மூன்று மாதங்களுக்கு மகளிா் உரிமைத் தொகை ரூ.3,000, கோடை காலத்துக்கு சிறப்புத் தொகை ரூ.2,000 என திமுக அரசு கொடுத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த முதல் 28 மாதங்கள் உரிமைத் தொகையை ஏன் கொடுக்கவில்லை?.

கடந்த 2025-ஆம் ஆண்டு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது, தோ்தல் நடைபெறும் ஆண்டில் கொடுத்தால் போதும், இப்போது கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவாா்கள் என்ற மன ஓட்டத்தை ஓா் அமைச்சரே வெளிப்படுத்தினாா். அதன்படி, நிகழாண்டு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.3,000 வழங்கப்பட்டு அரசுக்கு சுமாா் ரூ.6,936 கோடி செலவாகி இருக்கிறது.

இப்படி பரிசாக வழங்கி அரசு ஊழியா் அல்லாத பொதுமக்களின் வாக்குகளைக் குறிவைத்தாகிவிட்டது. அரசு ஊழியா்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு அறிவித்துள்ளது. ஆனால், நிதிப் பற்றாக்குறை இருப்பதால், அதை இப்போது நிறைவேற்ற முடியாது எனவும் தெரிவித்தது.

அப்படியென்றால் மகளிா் உரிமைத் தொகைக்கு மொத்தமாக வழங்க இப்போது நிதி எங்கே இருந்து வந்தது?. பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணம் உங்கள் பணம்தான். அதே நேரத்தில் கடன் சுமை ஒவ்வொருவா் தலையிலும் சுமத்தப்பட்டு இருக்கிறது எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com