சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி, அது யாருக்கும் தாய்மொழியாக இருக்காது என்று இந்திய தொல்லியல்துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமர்நாத் ராமகிருஷ்ணன் நேற்று உரையாற்றினார்.
இந்த விழாவில் சமஸ்கிருதம் குறித்து அவர் பேசியதாவது:
”தமிழி என்ற எழுத்து எகிப்தியர்களின் கல்லறைகளிலும் கிடைக்கிறது என்று வெளிநாட்டு அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 30 இடங்களில் தமிழில் எழுத்துகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். குறிப்பாக சிகை கொற்றன் என்ற எழுத்து எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அந்த கொற்றன் என்ற எழுத்து நமது புகலூர் அகழாய்வில் கிடைத்துள்ளது.
தமிழகத்திலிருந்து எகிப்து சென்று வியாபாரம் செய்துள்ளார்கள். அப்போது அவர்கள் தங்களின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். தற்போது சிகை கொற்றன் என்ற வார்த்தை வைரலாகி வருகின்றது. சிகை என்பது சமஸ்கிருத வார்த்தை என்கிறார்கள்.
சமஸ்கிருதம் என்பது உருவாக்கப்பட்ட மொழி, அது யாருக்கும் தாய்மொழியாக இருக்காது. ஏனென்றால் ஒரு பெண் பேச முடியாத மொழி நிச்சயமாக தாய்மொழியாக இருப்பது சாத்தியமே கிடையாது.
மொழி என்பது பெண்ணிடம் இருந்துதான் தோன்றும். பெண்ணிடம் இருந்து தோன்றும்போதுதான் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் சமமாகப் போகும். சமஸ்கிருதம் என்பது மதச் சடங்கு மொழி, கடவுளைப் போற்றுவதற்காக இயக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட மொழி. அது ஆணுக்கும் ஆணுக்கும் இடையே மட்டும்தான் பயன்படும்.
தமிழில் உள்ள சொற்களை எடுத்துக் கொண்டு சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆகையால் சிகை என்ற வார்த்தை தமிழில் இருந்து வந்ததா என்பதை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். நிச்சயம் தமிழ் மொழி என்பதுதான் விடையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.