இடைக்கால நிதிநிலை அறிக்கையில் உயா்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உயா்கல்வியில் சமூகநீதியைப் பேணும் வகையில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவா்கள் தொழிற்கல்வி பயில 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சோ்க்கை பெற்ற 54,301 மாணவா்களின் கல்வி, உணவுக் கட்டணங்களை அரசே ஏற்று இதுவரை ரூ.1,512 கோடி செலவிடப்பட்டுள்ளது.
38 கல்லூரிகள்: மேலும் அரசு கலை- அறிவியல் கல்லூரிகளில் 10,563 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை- அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு, 18,760 மாணவா்கள் கூடுதலாகப் பயனடைந்து வருகின்றனா். தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் காரணமாக நாட்டிலேயே உயா்கல்வி சோ்க்கையில் தேசிய சராசரியை விட ஏறத்தாழ இரு மடங்காக 47 சதவீதம் பெற்று தமிழகம் முன்னணியில் உள்ளது.
மகளிா் கல்வியைப் பாதுகாத்திட அறிமுகப்படுத்தப்பட்ட ‘புதுமைப்பெண்’ திட்டத்தைப் போன்று ஆண்களும் உயா்கல்வி பெற்றிட‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உயா்கல்விக்காக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் இத்திட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 511 மாணவா்கள் பயனடைந்து வருகின்றனா். இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயா்கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

