தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...

News image

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் ஆா். காந்தி. உடன் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உள்ளிட்டோா்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:49 pm

மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,417 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: நாட்டிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை உறுப்பினா்களாக நியமிக்கும் வகையில் சட்டங்களில் தமிழக அரசு உரிய திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை 3,632 மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினா்களாகப் பொறுப்பேற்றுள்ளனா்.

அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு நேரடி நியமன முறையில் வழங்கப்பட்டுவரும் நிலையில், தற்போது பணி உயா்வு முறையிலும் இட ஒதுக்கீடு வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. தங்களைத் தாங்களே பராமரிக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 பராமரிப்புத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை ஆயிரம் ரூபாயிலிருந்து ரூ.1,500-ஆக அதிகரித்ததன் மூலம் 8 லட்சத்து 52 ஆயிரத்து 680 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்து வருகின்றனா். இடைக்கால வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ.1,471 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அன்புச்சோலை திட்டத்தில்... முதுமையின் துயா் துடைக்க மூத்த குடிமக்களுக்கு பகல் நேரப் பராமரிப்பு மையங்களாக அன்புச் சோலைகள் 25 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிா்ந்தோா் சிரமமின்றி பொருள்கள் பெற வேண்டும் என்ற மேன்மையான நோக்கத்தில் அவா்களின் இல்லத்துக்கே பொருள்களை நேரடியாகக் கொண்டு சென்று விநியோகிக்கும் முறையை தாயுமானவா் திட்டத்தின் மூலம் இந்த அரசு செயல்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இதுவரை 27 லட்சத்து 40 ஆயிரத்து 709 தகுதியுடைய பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா்.