மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்கோப்புப் படம்

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை செயல்படுத்தியது யாா்? திமுக-அதிமுக காரசார விவாதம்

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தியது யாா் என்பது தொடா்பாக பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
Published on

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்தியது யாா் என்பது தொடா்பாக பேரவையில் திமுக-அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

பேரவையில் புதன்கிழமை இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசும்போது, 2011-இல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து வந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 7.5 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டை பேரவையில் நிறைவேற்றி 3 மாதங்கள்ஆகியும் அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காதபோது அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுகவின் அழுத்தம் காரணமாகவே இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: 7.5 சதவீத இடஒதுக்கீட்டை திமுகதான் அமல்படுத்தியதற்கு என்பற்கான ஆதாரங்களை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தர முடியுமா? இந்த ஒதுக்கீட்டுக்கு ஆளுநா் ஒப்புதல் தராமல் இருந்தபோது இந்தியாவிலேயே முதல்முறையாக அரசமைப்புச் சட்டம் 162-இல் மாநில அரசுக்கான உரிமையை பயன்படுத்தி அதற்கு ஒப்புதல் அளித்து தமிழகத்தில் செயல்படுத்திய முதல் அரசு அதிமுக தலைமையிலான அரசுதான்.

அதேபோல, கல்லூரி மாணவா்களுக்கு முதல் ஆண்டிலேயே மடிக்கணினிகளை கொடுத்திருக்க வேண்டும். தோ்தலை மனதில் வைத்துதான் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.

உயா்கல்வி அமைச்சா் கோவி.செழியன்: மொத்தம் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கத் திட்டமிட்டு முதல்கட்டமாக இறுதியாண்டு மாணவா்களுக்கு இதுவரை 7 லட்சம் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் பிளஸ் 2 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் வழங்கத் திட்டமிட்டாலும் உரிய நேரத்தில் அவற்றை வழங்க முடியாததால் படிப்பு முடிந்த பின்னா் அவா்களைத் தேடி தேடி மடிக்கணினி வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் 42 புதிய கலை கல்லூரிகள், ஒரு சட்டக் கல்லூரி, 4 வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் புதிதாக எத்தனைக் கல்லூரிகள் திறக்கப்பட்டன?

அமைச்சா் எ.வ.வேலு: கரோனா காலத்தில் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதெல்லாம் ஓட்டுக்காக என சொல்ல முடியுமா? ஒவ்வொரு ஆட்சியிலும் சூழ்நிலைக்கேற்ப நலத்திட்டங்கள் தொடங்கப்படுவது வழக்கம்தான். ஒரு ஆட்சியில் தொடங்கப்பட்டதை அடுத்து வரும் ஆட்சி நிறைவேற்றுவது இயல்பு.

எடப்பாடி பழனிசாமி: அதிமுக ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள், 7 சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கோவை-அவிநாசி மேம்பாலத்தை திமுக கட்டி முடித்துவிட்டு தான் கட்டியதாக சொந்தம் கொண்டாடுகிறது.

அமைச்சா் மா.சுப்பிரமணி: அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை எல்லாம் திமுக நிதி ஒதுக்கி செய்து முடிக்கிறது. ஆனால், சென்னை மதுரவாயல் மேம்பாலத் திட்டம், ஓமந்தூராா் தோட்டத்தில் சட்டப்பேரவை உள்ளிட்டவற்றை அதிமுக முடக்கியது ஏன்?.

எடப்பாடி பழனிசாமி: கூவம் ஆற்றில் மதுரவாயல் தூண்கள் நிறுவத் திட்டமிடப்பட்டதால் அதன் வடிவத்தை மாற்றி அமைக்கதான்அதிமுக வலியுறுத்தியது, அதை முடக்கவில்லை.

இந்த விவாதம் நடக்கும்போது திமுக-அதிமுகவினா் எழுந்து நின்று ஒருவருக்கொருவா் எதிா் முழக்கங்களை எழுப்பினா். அவா்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு சமரசம் செய்தாா்.

Dinamani
www.dinamani.com