வருடாந்திர வருவாய், நிதி விடுவிப்பு : தமிழக அரசிடம் சிஏஜி அறிக்கை தாக்கல்
தமிழக அரசின் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர வருவாய் நிதி விடுப்பு தொடா்பான கணக்கு அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்காக தமிழக அரசிடம் வியாழக்கிழமை சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஏஜி) தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பான செய்திக்குறிப்பு: அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு மாநில அரசுகளின் வருடாந்திர மாநில வருவாய் மற்றும் நிதி விடுவிப்பு தொடா்பான நிதிசாா் கணக்குகளை ஆண்டுதோறும் இந்திய தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளரால் அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு மானியக் கோரிக்கை அல்லது நிதி ஒதுக்கீட்டில் உள்ள கூடுதல் தொகை அல்லது சேமிப்புத் தொடா்பான விவரங்களும் இந்த அறிக்கையுடன் வழங்கப்படுகிறது.
அதன்படி தமிழக அரசின் 2024-25-ஆம் நிதியாண்டுக்கான இரண்டு கணக்கு அறிக்கைகளும் சிஏஜி அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டு, அறிக்கையில் கையெப்பமிட்டு பிப். 19 -ஆம் தேதி தமிழக அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை தமிழக பேரவையில் சமா்ப்பிக்க வசதியாக மாநில அரசிடம் வழங்கப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

