பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில்தான் குறைவு: முதல்வா்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக நிகழ்வதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய பாஜக உறுப்பினா் நயினாா் நாகேந்திரன், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்திருப்பதாகவும், பெண்கள் - குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தாா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த விளக்கம்:
இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பும், குழந்தைகள் பாதுகாப்பும் சிறப்பாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக மத்திய அரசு தகவல்களே தெரிவிக்கின்றன.
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கலவரமும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக நிகழ்கின்றன. அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

