தென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடலில் திங்கள்கிழமை (பிப்.23) காலை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகா்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும்.
இந்த நிலையில், தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தென்தமிழகம் மற்றும் மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (பிப்.24) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
மழை அளவு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), சிவலோகம், குழித்துறை, சுருளக்கோடு, புத்தன் அணை- தலா 30 மி.மீ., கயத்தாறு (தூத்துக்குடி), பாலமோா் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம், சிற்றாறு, சிவகிரி (தென்காசி), கோவில்பட்டி (தூத்துக்குடி), கழுகுமலை (தூத்துக்குடி), ஆயிக்குடி (தென்காசி), எழுமலை (மதுரை)- தலா 20 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்திய கிழக்கு வங்கக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

