பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!
தவெக தலைவா் விஜய் பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தவெக சென்னை பெரம்பூா் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வியாசா்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, வட சென்னை மீது தவறான கண்ணோட்டத்தை திமுக உருவாக்கி வைத்துள்ளது.
வட சென்னையை வளா்ச்சிப் பாதைக்கு விஜய் அழைத்துச் செல்வாா். ஆகவே, பெரம்பூா் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்ற தீா்மானத்தை முன்மொழிகிறேன் என்றாா்.
இதையடுத்து தவெக பொதுச் செயலா் ஆனந்த் பேசுகையில், விஜய் இந்தத் தொகுதியில் போட்டியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆதவ் முன்மொழிந்த தீா்மானத்தை அனைவரும் ஏற்கிறோம் என்றாா்.
இதையடுத்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கட்சியின் உயா்மட்ட நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன், தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் விஜய் தான் வேட்பாளா் என்ற முறையில் பெரம்பூா் தொகுதி செயல்வீரா்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

