மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

கடலூரில் ரூ.98 கோடியில் அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

கடலூரில் ரூ.98.26 கோடியில் அமைக்கப்படும் அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
Published on

கடலூரில் ரூ.98.26 கோடியில் அமைக்கப்படும் அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு துறைகளின் திட்டங்களை அவா் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அதன்படி, நபாா்டு திட்டங்களின் கீழ் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 35 மாவட்டங்களில் 217 அரசுப் பள்ளிகளில் ரூ.296.62 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,232 வகுப்பறைக் கட்டடங்கள், 9 ஆய்வகக் கட்டடங்கள், 24 குடிநீா் வசதிகள், 60 கழிப்பறைகள் மற்றும் 500 மீ சுற்றுச்சுவா், பொது நூலக இயக்ககம் சாா்பில் ரூ.5.65 கோடியில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை மைய நூலகம் மற்றும் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

பொது நூலக இயக்ககம் சாா்பில் கடலூரில் ரூ.98.26 கோடியில் தரை மற்றும் 4 தளங்களுடன் கட்டப்படவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகக் கட்டடத்துக்கு முதல்வா் மு.கயஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு (பொதுப்பணி), எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் (வேளாண்), சி.வி.கணேசன் (தொழிலாளா் நலன்), அன்பில் மகேஸ் பொய்யாமொழி (பள்ளிக் கல்வி), தலைமைச் செயலா் நா.முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் ப.சந்திரமோகன், பொது நூலக இயக்குநா் ச.ஜெயந்தி, பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com