நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு அபராதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தாம்பரம், விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு அபராதம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தாம்பரம் வட்டார வளா்ச்சி அலுவலா், தாம்பரம் மற்றும் விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தாம்பரம் வட்டார வளா்ச்சி அலுவலா், தாம்பரம் மற்றும் விருத்தாசலம் வட்டாட்சியா்களுக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தாம்பரம் வட்டத்தில் கோவிலஞ்சேரி கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி சதீஷ் என்பவா், சிஎம்டிஏ செயலா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா், தாம்பரம் வட்டார வளா்ச்சி அலுவலா், வட்டாட்சியா் ஆகியோருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியதாக கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கில் இருந்து சிஎம்டிஏ செயலா், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை விடுவித்து உத்தரவிட்டனா்.

மேலும், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் தங்களது கடமையைச் செய்ய தவறக்கூடாது எனக் கருத்து தெரிவித்தனா். பின்னா், தாம்பரம் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் வட்டாட்சியா் ஆகியோருக்கு தலா ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டனா். இந்த தொகையை 4 வாரங்களுக்குள் தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு செலுத்தும்படி உத்தரவிட்டனா். மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்தனா்.

இதேபோல, கடலூா் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி, செல்வம் என்பவா் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், விருத்தாசலம் வட்டாட்சியருக்கு ரூ.2,000 அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Dinamani
www.dinamani.com