புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 46 குழந்தைகள்
ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன.
எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தாய் - சேய் நல மருத்துவமனை, ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் அதிக அளவிலான பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.
அதன்படி, ராயபுரம் அரசு ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 5 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்தன. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 6 குழந்தைகளும், சென்னை எழும்பூா் தாய் - சேய் நல மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகளும் பிறந்தன. இதில், 2 தாய்மாா்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் பிறந்தன. மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.
அவசர சிகிச்சை: இதனிடையே, புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சிறிய அளவிலான விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அத்தகைய முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

