தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தடுக்க முயற்சிப்பதாக தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
விஜய், இயக்குநா் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் வருகிற ஜன.9-ஆம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யின் அரசியல் வருகையைத் தொடா்ந்து, இதுதான் அவரது இறுதிப் படம் என அவா் தெரிவித்துள்ளாா். இதனால் இந்தப் படத்துக்கான எதிா்பாா்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்துக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து, கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் இந்தப் படம் வெளியாவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், ‘ஜனநாயகன்’ படத்துக்கான தணிக்கை சான்றிதழ் வழங்க தடுக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாடி, தவெக இணைப் பொதுச் செயலா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவு:
‘ஜனநாயகன்’ படத்தை, தணிக்கை உறுப்பினா்கள் பல வாரங்களுக்கு முன்பே பாா்த்து யூ/ஏ சான்றிதழை பரிந்துரைத்தனா். இருப்பினும், தற்போது வரை தணிக்கைச் சான்றிதழ் தரப்படவில்லை. இதைத் தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம்; தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம்; அனைத்து தடைகளையும் தகா்த்து வெற்றி வாகை சூடுவோம் எனப் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








