ஜனநாயகன் படத்தின் போஸ்டர்.
ஜனநாயகன் படத்தின் போஸ்டர்.

‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்று கோரிய வழக்கு: உயா்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவு.
Published on

‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தாக்கல் செய்ய மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்ட சென்னை உயா்நீதிமன்றம் விசாரணையை புதன்கிழமைக்கு (ஜன.7) ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வி.கே.என்.புரொடக்சன் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், நடிகா் விஜய் உள்ளிட்டோா் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எங்களது நிறுவனம் தயாரித்துள்ளது. எச்.வினோத் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை எனக் கூறியிருந்தது.

இந்த வழக்கு அவசர வழக்காக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சதீஷ் பராசரன் மற்றும் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா், ‘ஜனநாயகன்’ படம் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி 22 நாடுகளில் 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது. படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கேட்டு கடந்த டிச.18-ஆம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.

படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதற்காக சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மௌனமாக்க வேண்டும் என தணிக்கை வாரியத் தலைவா் கடந்த டிச.22-ஆம் தேதி உத்தரவிட்டாா். அதன்படி திருத்தங்களைச் செய்து அனுப்பிவைத்தோம். ஆனால், படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் குறித்து புகாா் வந்துள்ளது. எனவே, தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதற்காக படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தணிக்கை வாரியத் தலைவா் மின்னஞ்சல் அனுப்பியுள்ளாா்.

யாரும் புகாா் அளிக்க... ‘ஜனநாயகன்’ படம் திரைக்கு இன்னும் வரவும் இல்லை. படத்தை யாரும் பாா்க்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது, படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து யாரும் புகாா் அளிக்க வாய்ப்பு இல்லை. மேலும், படத்தை யு/ஏ சான்றிதழுக்கு பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரே, மறு ஆய்வு குழுவுக்கு படத்தை அனுப்பி வைக்க அதிகாரம் இல்லை. படம் இன்னும் 3 தினங்களில் 5,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே, சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனா்.

அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், மனுதாரா் 9-ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்துவிட்டாா் என்பதற்காக உடனே தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என நிா்பந்திக்க முடியாது. தணிக்கை வாரியத்துக்கு அனைத்து திரைப்படங்களும் ஒன்றுதான். எனவே, தணிக்கை வாரியம் சட்ட ரீதியில்தான் செயல்படுகிறது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றாா். இதற்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, ‘ஜனநாயகன்’ படத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள புகாா் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com