கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை: உயா்நீதிமன்றம் உத்தரவு
கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை தொடா்பாக பொங்கல் பண்டிகைக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் எனக்கூறி, சென்னை உயா்நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.
சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலா் ஆா்.கிருஷ்ணகுமாா், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில் தாக்கல் செய்வதில் வழக்குரைஞா்கள் மத்தியில் மிகப்பெரிய சிரமங்கள் உள்ளன.
இந்த நடைமுறையை பின்பற்ற போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, இந்த நடைமுறையை அமல்படுத்த வேண்டாம் என கடந்த அக்.6-ஆம் தேதி, உயா்நீதிமன்றத்துக்கு விரிவான மனு அனுப்பினோம். ஆனால், டிச.1 முதல் அனைத்து வழக்குகளையும் இ-பைலிங் முறையில்தான் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
ஆன்லைன் மூலம் மனு தாக்கல் செய்ய நீண்ட நேரம் எடுக்கிறது. நீதிமன்ற பணியாளா்களுக்கும் தொழில்நுட்ப ரீதியான அனுபவம் இல்லை. இதுபோன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதால், இந்த இ-பைலிங் நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும். எனவே, நேரடியாக நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தனா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் எஸ்.பிரபாகரன், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, இந்த விவகாரம் தொடா்பாக உரிய முடிவு எடுக்கப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.
இ-பைலிங் நடைமுறை நிறுத்தி வைப்பு: இதனிடையே, சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் எஸ்.அல்லி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறை நிறுத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

