

ஜன நாயகன் : நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு பாஜக அரசு நெருக்கடி தருவதாகக் கூறும் காங்கிரஸின் குற்றச்சாட்டுக்கு பாஜக மூத்த தலைவர் எச். ராஜா மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களுடன் எச். ராஜா பேசுகையில் "காங்கிரஸ் ஆட்சியில் சிபிஐ என்பது காங்கிரஸ் புலனாய்வு மையமாக இருந்தது. திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இருந்தபோதே, ஆ. ராசாவையும் கனிமொழியையும் சிறையில் அடைத்தனர்.
அவர்கள் எப்போதும் கத்தியை முதுகில் வைத்துக்கொண்டு பேரம் பேசுபவர்கள்.
பாஜக அரசு அதிகாரத்தை அரசியல் காரணங்களுக்காகப் ஒருபோதும் பயன்படுத்தாது.
நாங்கள் (பாஜக) நெருக்கடி கொடுக்க வேண்டுமென்றால், செப். 27-லிலேயே கொடுத்திருப்போம். ஆனால், மனிதாபிமானத்தோடுதான் மத்திய பாஜக அரசு செயல்பட்டது.
பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால், இன்று விஜய் வெளியில் வந்திருக்க முடியாது. ஒருவரின் பலவீனத்தை கையிலெடுத்து, பாஜக ஒருபோதும் நெருக்கடி கொடுக்காது" என்று தெரிவித்தார்.
மேலும், நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் ஹிந்தி எதிர்ப்பு குறித்தும் எச். ராஜா பேசுகையில் "ஹிந்தி எதிர்ப்பு ஸ்டாலின் குடும்பத்தில் இருக்கிறதா? அவர்களின் குடும்பம் நடத்திவரும் சன் சைன் பள்ளியில் ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கின்றனர்.
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், டி.ஆர். பாலு உள்ளிட்ட 40 திமுக தலைவர்களின் குடும்பத்தினர் பள்ளிகள் நடத்தி வருகின்றனர். இவையெல்லாம் ஹிந்தி, சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்கும் சிபிஎஸ்சி பள்ளிகள்.
திமுகவிலேயே ஹிந்தி எதிர்ப்பு எடுபடவில்லை; தமிழக மக்களிடம் எப்படி எடுபடும்" என்று தெரிவித்தார்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காமல், மத்திய அரசு நெருக்கடி தருவதாக பாஜக மீது திமுக கூட்டணிக் கட்சிகளும், திமுக மீது பாஜகவும் மாறிமாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.