

தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் மாவட்டங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நேற்று (07-01-2026) தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவியது.
இது, இன்று (08-01-2026) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 0830 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில், ஹம்பாந்தோட்டைக்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே சுமார் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், மட்டகிளப்பிற்கு (இலங்கை) கிழக்கு - தென்கிழக்கே 420 கிலோ மீட்டர் தொலைவிலும், திரிகோணமலைக்கு (இலங்கை) தென்கிழக்கே 520 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 810 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 980 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக நகர்ந்து, இலங்கை கடலோரப்பகுதிகளில், ஹம்பாந்தோட்டை (இலங்கை) மற்றும் கல்முனைக்கு (இலங்கை) இடையே நாளை (09-01-2026) மாலை / இரவு கரையை கடக்கக்கூடும்.
● தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
ஜன. 08ல் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஜன. 09ல் திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜன. 10ல் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
உறைபனி எச்சரிக்கை
ஜன. 08, 09 ஆகிய தேதிகளில் நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை..
இன்று (08-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை..
08-01-2026 முதல் 10-01-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.