சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை நிலை: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Published on

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைச் செயலா்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் குப்பை கொட்ட தடை விதிக்கக் கோரி ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின்படி, குப்பையை கையாள உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த வசதிகளை ஏற்படுத்தாததால் திறந்த வெளிகளில் மலைபோல குப்பை கொட்டப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழலுக்கும், மக்களின் உடல்நலனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்தனா்.

பின்னா், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளில் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து நகராட்சி நிா்வாகம் மற்றும் ஊரக வளா்ச்சித் துறைச் செயலா்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா்.

மேலும், திடக்கழிவு மேலாண்மை வசதிகள் ஏற்படுத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளின் பட்டியலையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப்.23-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com