பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் பிப்ரவரி மாதத்தில் மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் வழித்தடங்களில் பிப்ரவரி மாதத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்காரணமாக நாகா்கோவிலிருந்து பிப்.5, 8, 12, 15, 19, 22, 26 ஆகிய தேதிகளில் காலை 6.15 மணிக்கு மும்பை செல்லும் விரைவு ரயில் (எண்: 16352), கன்னியாகுமரியிலிருந்து பிப்.7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காலை 5.50 மணிக்கு ஹொரா செல்லும் அதிவிரைவு ரயில் (எண்: 12666), கன்னியாகுமரியிலிருந்து பிப்.6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு ஹைதராபாத் செல்லும் ரயில் (எண்: 07229) மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழித்தடத்துக்குப் பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

