பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணி விழிப்புணர்வு தேவை: அண்ணாமலை
கல்விச் சிந்தனை அரங்கில் அண்ணாமலை பேசியது குறித்து...


பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இரு நாள்கள் (மார்ச் 2, 3) நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கின் இரண்டாவது நாளில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வின் விவாதத்தை தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் ஒருங்கிணைத்தார்.
பொதுத் துறை சேவையில் இளைஞர்களின் அர்ப்பணிப்பு என்ற தலைப்பில் அண்ணாமலை பேசியதாவது:
''நாட்டில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். நாட்டில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் குடிமைப் பணித் தேர்வை எழுதுகின்றனர். இறுதியில் 850 - 900 பேர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இளைஞர்களை இன்னும் சரிவர நாம் பயன்படுத்தவில்லை. அரசுத் தேர்வுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தயாராவதிலேயே, தேர்வு எழுதுவதிலேயே அவர்களின் இளமை கழிகிறது. தனியார் துறைகளில் இருக்கும் பலரும் குடிமைப் பணிக்கு வர மற்றொரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
குடும்பச் சூழல், பொறுப்புணர்வு காரணமாக இளம் வயதில் இளைஞர்களால் குடிமைப் பணித் தேர்வு எழுதி அரசுத் துறைக்குள் வரமுடியவில்லை. 6 - 7 முறை தேர்வு எழுதியும் அரசுத் துறைக்குள் நுழைய முடியாத இளைஞர்கள் துவண்டுவிடுகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணிகள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். மற்றவர்களுக்கு நீங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கான இடமல்ல இது.
குடிமைப் பணியில் பங்கேற்று நேர்காணல் வரை சென்று தேர்வாகவில்லை என்றால், அதற்காக எடுத்துக்கொண்ட ஒட்டுமொத்த நேரமும் வீண் என்ற நிலையே உள்ளது. முதல் நிலை, முதன்மைத் தேர்வு எழுதி தேர்வாகி நேர்காணலில் தோல்வி அடைந்தால், மற்றொரு முறை நேரடியாக நேர்காணல் செல்வதற்கு மீண்டும் அவர்கள் தேர்வு எழுத வேண்டிய நிலை உள்ளது.
அரசுத் துறை சேவையில் காவல் துறை மிகச்சிறந்த அனுபவம் கொண்டது. என் பணிக்காலத்தில் குற்றவாளிகளைத் தேடி அவர்கள் பின்பு ஓட வேண்டியதாயிருந்தது. நேர்மறையான மனிதர்களை சந்திக்க வேண்டும் எனக் கருதினேன்.
பணி அழுத்தத்தின் காரணமாக என் பணியை ராஜிநாமா செய்தேன் என பலர் கூறுகின்றனர். ஆனால், வாழ்க்கையை புரிந்துகொள்ளும் வயது அது. என் வயது ஒத்த சிலர் காவல் துறையில் இருந்து விலகி சொந்தமாகத் தொழில் தொடங்கினர். இதில் எந்தவொரு தவறும் இல்லை'' எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...