/

பெண்கள் குறித்து அவதூறு! டிஜிபி அலுவகத்தில் விஜய் புகார்!

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார்.

News image

டிஜிபி அலுவலகத்திற்கு வெளியே விஜய்

எக்ஸ்

Updated On :26 மார்ச் 2026, 2:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரத்தில் அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார்.

தவெக மகளிர் பிரிவில் உள்ள பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பொன்ராஜ் பேசியிருந்ததற்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

அவருடன் தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் உடன் இருந்தார்.

ஆளும் திமுக அரவணைப்பில் பொன்ராஜ் தொடர்ந்து பெண்கள் குறித்து அநாகரீகமாகப் பேசி வருவதாகவும், தமிழக மகளிரை கீழ்த்தரமாகப் பேசிவரும் பொன்ராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை தலைமை இயக்குநரிடம் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆளும் தி.மு.க.வின் அதீத ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ், தமிழகம் முழுவதும் இருக்கும் என் அம்மா, அக்கா, தங்கைகளான ஒட்டுமொத்த தமிழ்நாட்டுப் பெண்கள் இனத்தையே விலைமாதர் என்று அர்த்தம் தொனிக்கும் சொல்லை நேரடியாகவேப் பயன்படுத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து வருகிறார்.

தமிழ்ப் பண்பாட்டில் பெரும் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய தாய்க்குலத் தங்கங்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் பொன்ராஜ், ஆளும் கட்சியான தி.முக. தலைமையின் அரவணைப்பில் இருப்பதால் தன்னை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என்ற நினைப்பில் எல்லைக் கடந்து அநாகரிகமாகப் பேசி வருகிறார்.

இவ்வாறு, நம் தமிழக மகளிரை மிக மோசமாகப் பேசி வரும் இந்த நபர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து பெண்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.