/

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

News image

ஆளுநருடன் விஜய் - ANI

Updated On :7 மே 2026, 3:10 pm IST

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் தவெக கட்சித் தலைவர் விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பாரா? ஏன் இதுவரை அழைப்பு விடுக்கப்படவில்லை? என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை புதன்கிழமை (மே 6) சந்தித்து உரிமை கோரினார் தவெக தலைவர் விஜய்.

ஆனால், தவெகவுக்கு ஆதரவளிக்கும் 118 எம்எல்ஏ-க்களின் பட்டியலை அளிக்க வேண்டும் என ஆளுநர் அப்போது விஜய்யிடம் கூறியதாகக் கூறப்பட்ட நிலையில், நேற்று இரவு வரை தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை.

Story image

இந்த நிலையில், ஆளுநரை இன்று காலை தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்தித்து, அவரது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து ஆளுநர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்று ஆளுநர் மாளிகை ஒரு விளக்கத்தை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தவெக தலைவர் விஜய்யை, ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைத்திருந்தார். அப்போது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டியது ஏன் அவசியம் என்பது குறித்து விஜய்க்கு ஆளுநர் விளக்கம் கொடுத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, தவெக தனிப்பெரும் கட்சியாக உரிமை கோரவில்லை, மாறாக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆதரவு என்று கூறி ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். அதனால்தான் தவெகவை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், விஜய்யிடம் ஆளுநர் கொடுத்த விளக்கத்தில், தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைப்பது தொடர்பாக மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஏஆர்எல் சுந்தரேசனிடம் ஆளுநர் மாளிகை கருத்து கேட்டுள்ளது,

மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சுந்தரேசன் கொடுத்த அறிவுறுத்தலின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். 108 எம்எல்ஏக்கள் உள்ள தனிப்பெரும் கட்சியாக வந்து தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவு என கூறி 113 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது என்றும், கூட்டணி என குறிப்பிட்டுள்ளதால் 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, தாங்கள்தான் தனிப்பெரும் கட்சி என கூறி ஆட்சி அமைக்க தவெக உரிமை கோராமல், கூட்டணியுடன் வந்துள்ளதால் வேறு எந்தக் கட்சிகள் தவெகவை ஆதரிக்க உள்ளன எனக் கேட்டுள்ளோம் என்று ஆளுநர் மாளிகை விளக்கம் கேட்டுள்ளது. எனவே, மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அறிவுறுத்தியிருப்பதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தவெக தலைவர் விஜய்யிடம், தனிப்பெரும்பான்மை பலம் இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது என்று ஆளுநர் விளக்கம் கொடுத்ததாகவும், நேற்று விஜய், ஆளுநரை சந்தித்த நிலையில், சட்ட விளக்கம் குறித்து ஆளுநரே விஜய்யை இன்று அழைத்து விளக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Summary

Governor office explains why Vijay was not invited to form government in Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.