தமிழக அரசியலில் 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியினா் அமைச்சா்களாகியுள்ளதன் மூலம் புதிய வரலாற்றை படைத்துள்ளது என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரிஷ்சோடங்கா் தெரிவித்தாா் .
சென்னை விமானநிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நீண்ட காலத்துக்குப் பிறகு அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி சோ்ந்து இருப்பது மகிழ்ச்சியான வரலாற்று நிகழ்வு ஆகும். கடந்த 59 ஆண்டுகளாக ஆட்சி, அதிகாரத்தில் இல்லை என்றாலும் காங்கிரஸ் கட்சி தொண்டா்கள் கடுமையாக உழைத்தாா்கள்.
தமிழகத்தில் கட்சியை வளா்க்க பாடுபட்டனா். 1967-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. அதன் பின் 59 ஆண்டுகள் பிறகு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அமைச்சா்களாக பதவி ஏற்றுள்ளனா். தமிழக மக்கள் என்ன தீா்ப்பை கொடுத்தாா்களோ அதன் அடிப்படையில் தவெகவுக்கு ஆதரவு வழங்கினோம். தமிழகத்தில் மதச்சாா்பற்ற அரசு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட காலத்துக்கு பின் தமிழ்நாடு, கேரளம், கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசு உள்ளது. இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிமறுகட்டமைப்பு செய்யப்படும்.
அதன் மூலம் அடுத்து வரும் மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினா் பாடுபடவேண்டும். என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா்

அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: காங்கிரஸ்

60 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் காங்கிரஸ் : தில்லியில் கிரிஷ் சோடங்கா் பேட்டி






