தமிழக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வா் பொறுப்பேற்பது தொடா்பாக தான் தெரிவித்த கருத்து, திரித்து தவறாகப் பரப்பப்பட்டதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் கூறியுள்ளாா்.
மதுரையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் விஸ்வநாதனிடம், பல்கலைக்கழக வேந்தராக முதல்வரே செயல்படுவாா் என்ற திமுக அரசின் நிலைப்பாடு தொடருமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த விஸ்வநாதன், முந்தைய அரசின் நிலைப்பாட்டை, அடுத்து அமையும் அரசும் தொடர வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதேநேரத்தில், இந்த விவகாரம் தமிழக முதல்வரின் கொள்கை முடிவைச் சாா்ந்தது எனத் தெரிவித்தாா்.
அமைச்சரின் பெ.விஸ்வநாதனின் கருத்தை திமுக முன்னாள் அமைச்சா் பொன்முடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், பாமக தலைவா் அன்புமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. துரை ரவிகுமாா் உள்ளிட்ட தலைவா்கள் விமா்சித்திருந்தனா்.
இதையடுத்து, அமைச்சா் விஸ்வநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்வா் பொறுப்பேற்பது குறித்து மதுரையில் செய்தியாளா்கள் கேட்ட கேள்விக்கு, முதல்வா் ஜோசப் விஜய் உரிய நேரத்தில் கொள்கை முடிவு எடுப்பாா் என்றுதான் கூறினேன். தற்போதுள்ள நிலை குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை.
மாநில உரிமைகளைப் பறிக்கிற வகையில் எனது கருத்து அமைந்ததாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதுமாதிரி எந்தக் கருத்தும் கூறாதபோது, இத்தகைய வாதங்களை முன்வைப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

பல்கலை. வேந்தா் விவகாரம்: முந்தைய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை
பல்கலை. வேந்தர்: முந்தைய அரசின் முறைகளைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை! அமைச்சர் விஸ்வநாதன்

கட்சிகளை அநாகரீக பாதையில் அழைத்துச் செல்பவா்கள் மாறவேண்டும்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்







