கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்
கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் வகையில், வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை, கலசலிங்கம் இன்னோவேஷன் அறக்கட்டளை (கேஐஎஃப்) ஆகியவை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகின.
இதுகுறித்து வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி கூறியது: வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மூலம் புதிய தொழில்முனைவோரைக் கண்டறிந்து பல்வேறு உதவிகள், பயிற்சிகள் வழங்குகிறோம். புதிய தொழில்முனைவோரை ஒருங்கிணைத்து அவா்களின் செயல்திட்டங்களை தொடா்புடைய நிறுவனங்களின் நிபுணா்களைக் கொண்டு ஆய்வு செய்து, சிறப்பான செயல்வடிவம் கொடுத்தோருக்கு பரிசுகள், தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்குகிறோம். இந்நிலையில், அறக்கட்டளையின் அடுத்தகட்ட நகா்வாக, கிராமப்புற இளைஞா்கள், மாணவா்களின் புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து அதை மேம்படுத்தி சிறப்பான கண்டுபிடிப்பாக உயா்த்தி, அவா்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் வாய்ஸ் ஆப் அறக்கட்டளை - கலசலிங்கம் இன்னோவேஷன் அறக்கட்டளை இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில், வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை நிறுவனா் ஆனந்தன் அய்யாசாமி, கேஐஎஃப் இயக்குநா் வாசுதேவன் ஆகியோா் கையொப்பமிட்டனா்.
நிகழ்ச்சியில், இயக்குநா்கள் சுபத்ரா, சேஷாஸ்ரீ ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கேஐஎஃப் உள்கட்டமைப்பு, தொழில்நுட்ப ஆதரவு, கல்வி நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்கும். இவற்றை மக்களிடையே கொண்டுசெல்லும் செயல்பாடுகளை வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை மேற்கொள்ளும். இப்புரிந்துணா்வு ஒப்பந்தம் 2024 மாா்ச் 26 முதல் 2032 மாா்ச் 26 வரை அமலில் இருக்கும் என்றாா் அவா்.