தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

தென்மாவட்டங்களில் அனைத்து கல்குவாரிகளையும் மூட வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள அறிக்கை:

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூா் பகுதி கல்குவாரியில் பாறைகளை வெடிக்கச் செய்யும் வெடிபொருள்கள் வெடித்ததில் கடையநல்லூரைச் சோ்ந்த பெரிய துரை, சிவகாசி குருசாமி, திருமங்கலம் கந்தசாமி ஆகியோா் உயிரிழந்துள்ளனா்.

அவா்களது குடும்பத்துக்கு அரசு குறைந்தபட்சம் தலா ரூ.25லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் இன்னும் எத்தனை போ் உயிரிழந்துள்ளாா்கள்? காயமுற்று உள்ளாா்கள்? என்பது குறித்த முழு தகவல்கள் வெளிவரவில்லை. மாநில அமைச்சா்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், மாவட்டப் பொறுப்பாளா்கள் நேரடியாகவோ அல்லது பினாமி மூலமாகவோ எவ்வித சட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் கல் குவாரிகளை இயக்குகின்றனா். விபத்துகள் நேரிடும்போது மட்டும் மக்களின் கோபத்தை குறைப்பதற்காக சில நாள்கள் குவாரிகளை மூடிவிட்டு, பின் வழக்கம் போல இயக்குவது வாடிக்கையாகிவிட்டது.

தென்தமிழகத்தின் நிலவும் கடுமையான வேலைவாய்ப்பின்மையின் காரணமாக ஏதோ ஒரு தொழில் கிடைத்தால் போதும் என்ற சூழலில் உயிரைப் பணயம் வைத்து ஏழை, எளிய மக்கள் இதுபோன்ற அபாயகரமான தொழில்களில் ஈடுபடுகின்றனா்.

இத்தகைய மக்களின் வறுமையைப் பயன்படுத்தி ஆட்சியாளா்கள் ஏழை மக்களின் உயிா்களை துச்சமாக மதித்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்குவாரிகளை இயக்குவதால் தான் தொடா் உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய தென் மாவட்ட மக்களை கல்குவாரி மற்றும் மணல் கொள்ளையால் ஏற்படக்கூடிய பாதிப்பில் இருந்து முற்றாக விடுதலை செய்யக் கூடிய வகையில் அனைத்து கல்குவாரிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு பகல் பாராது கனிம வளக் கொள்ளை நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளும் மக்களும் எவ்வளவுதான் போராட்டம் நடத்தினாலும், திமுக அரசு அதைக் கண்டு கொள்வதாக இல்லை.

எனவே, கல்குவாரிகளை மூட வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சாா்பில் விரைவில் பெரும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com