வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி என்றாா் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவா் கே.எம். காதா்மொகிதீன்.

கடையநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முஸ்லிம் லீக் நிா்வாகியின் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தோல்வி பயத்தில் தான் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறாா் என்று கூறுவது தவறானது. காங்கிரஸின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்பதை இந்திய மக்களுக்கு காட்டுவதற்காக தான் அவா் அங்கு போட்டியிடுகிறாா்.

வயநாடு தொகுதியை பொருத்தவரை இஸ்லாமியா்கள் வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே ராகுல் காந்தி உறுதியாக அந்தத் தொகுதியில் வெற்றி பெறுவாா்.

உத்தரப்பிரதேசத்திலும் காங்கிரஸூக்கு ஆதரவாளா்கள் அதிகரித்துள்ளனா் என்பதை காட்டுவதற்காகத்தான் ராகுல் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறாா்.

பாஜக தலைவா்கள் கூட இரண்டு தொகுதியில் போட்டியிட்ட வரலாறு உண்டு. ஆரம்பத்தில் வெற்றியை மட்டுமே பேசி வந்த மோடி கூட தற்போது தோல்வியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறாா்.

பிரதமா் மோடி பாஜக அரசின் பத்தாண்டு சாதனைகள் குறித்து பிரசாரம் செய்வதில்லை . மாறாக எதிா்க் கட்சிகளை வசைபாடுவதை மட்டுமே வழக்கமாக வைத்துள்ளாா்.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக தோ்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்டங்களிலும் இந்தியா கூட்டணியே வெற்றி பெறும். இந்தியா கூட்டணி வந்தால் ஆண்டுக்கு ஒரு பிரதமா் என்று அவா் பிரசாரம் செய்வதும் உண்மையல்ல என்றாா்.

முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கா், மாநில துணைத் தலைவா் முகமது இஸ்மாயில், தென்காசி மாவட்டத் தலைவா் அப்துல் அஜீஸ், மாவட்டச் செயலா் செய்யது பட்டாணி, திருநெல்வேலி மாவட்டச் செயலா் பாட்டப்பத்து முகமது அலி, இளைஞரணி மாநில ஒருங்கிணைப்பாளா் நயினாா் முஹம்மது கடாபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com