சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது: கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது என கல்விச் சிந்தனை அரங்கில் காணொலி வாயிலாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது: கல்விச் சிந்தனை அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது என கல்விச் சிந்தனை அரங்கில் காணொலி வாயிலாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' நடத்தும் 'கல்விச் சிந்தனை அரங்கு 2022' சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலில் மார்ச் 8, 9 (செவ்வாய், புதன்) ஆகிய இரு நாள்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தக் கருத்தரங்கை வாழ்த்திக் காணொலி வாயிலாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். 

முதல்வர் பேச்சு:

“புகழ்பெற்ற ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் நடத்தும் கல்விச் சிந்தனை கருத்தரங்கில் காணொலி வாயிலாக பங்கேற்பதில் பெருமை அடைகிறேன். பத்தாம் ஆண்டாக நடைபெறும் இந்த கருத்தரங்கம் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கும் ஆலோசனைகளுக்குமான சிந்தனைக் களமாக விளங்கிவருகிறது.

இந்த நிகழ்வை முன்னின்று நடத்தும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத் தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியாவுக்கும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லாவுக்கும், ஏற்பாட்டாளர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைவருக்கும் கல்வி என்ற முன்னெடுப்பை முதன்முதலில் பெரிய அளவில் செயல்படுத்தியது நமது தமிழ்நாடுதான். அத்தகைய சமூக நீதி விளைந்த மண் இது. அப்படிப்பட்ட இந்த மாநிலத்தின் முதலமைச்சர் என்ற முறையில்தான் இன்று உங்களிடையே உரையாற்றுகிறேன்.

நீதிக் கட்சித் தலைவர் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். எனத் தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் அனைவருமே மாணவர்களை கல்விச்சாலைகளுக்கு அழைத்துவந்தார்கள். கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினார்கள். அனைத்துத்  தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேர்ந்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்ற தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு இருந்தது.

திராவிட இயக்கத்தில் அடிப்படையிலேயே கல்வியை முதன்மைப்படுத்தும் நோக்கம் இருந்தது. ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதிதான், உயர்கல்வியில் முன்னேறிய மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். 

தமிழ்நாடு முழுவதும் புதிய கல்லூரிகளை அவர் தொடங்கினார். பல பல்கலைக்கழகங்களை உருவாக்கினார். சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்தார். 

இவை அனைத்துக்கும் மேலாக தொழிற்கல்வி படிப்புகள் அனைவருக்கும் சென்றுசேர வேண்டும் என்பதற்காக தடைக் கற்களாக இருந்த நுழைவுத் தேர்வுகளை நீக்கினார். இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொறியாளர்களும் தலைசிறந்த மருத்துவர்களும் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு வித்திட்டது திமுகவும் கருணாநிதியும்தான்.

படிப்பதற்கே தகுதி வேண்டும் என்று தடைக் கற்கள் போட்ட இந்த சமூகத்தில், படித்தால் தகுதி தன்னால் வந்துவிடும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுத் தந்தோம். இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கல்லை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும். 

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கும், பெண்களுக்கும் பல்வேறு கட்டணச் சலுகைகளை அறிவித்ததும் தமிழ்நாடுதான். நூறாண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வடிவமைத்த, பண்படுத்திய, செதுக்கிய தமிழ்நாட்டின் கல்வி முறையைச் சிதைக்க, நீட் தேர்வை போன்று பழைய கருத்தாக்கங்களுக்குப் புதிய கல்விக் கொள்கை எனப் பெயரிட்டு ஒப்பனைபோட்டு மீண்டும் கொண்டுவருகிறார்கள்.

கடந்த 8 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் கீழ் கல்வி மிக மோசமாக சீரழிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கும், பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழமைவாதமும் மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகின்றன.

கல்விச்சாலைகளில் வெறுப்புணர்ச்சிக்கு வித்திட்டு, இளம் பருவத்திலேயே மாணவர்களின் நெஞ்சில் மதவாத சக்திகள் நஞ்சைக் கலக்குகிறார்கள். இதுதான் கல்விக்கு ஓர் அரசு செய்யும் பங்களிப்பா? இதுதான் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களும் மனசாட்சியுடையோரும் கல்வியாளர்களும் அறச்சீற்றத்தோடு துணிச்சலோடு கேட்க வேண்டிய கேள்வி. இதுபோன்ற கல்விக் கருத்தரங்குகளில் நம் நாட்டின் கல்வியைச் சூழ்ந்துள்ள இதுபோன்ற தீமைகளை ஒழிக்க பாடுபடவேண்டியது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும்.

கல்வி என்பது நாட்டின் சொத்து. அதை மத்தியில் ஆளும் ஒரு கட்சி சீரழிக்க நினைப்பது இந்த நாட்டின் உயிர்க் காற்றைப் பறிப்பதற்குச் சமம். இதை நல்லோர் யாரும் ஆதரிக்க மாட்டார்கள். அதனால்தான் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறோம்.

இப்படிப்பட்ட நிலையிலும் கல்வி முன்னேற்றத்துக்காக திமுக அரசு பல்வேறு முற்போக்கான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. கரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் உள்ள 24,325 நடுநிலைப் பள்ளிகளில் அனைத்திலும் திறன்மிகு வகுப்புகள், 6,992 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள், நவீன அறிவியல் மற்றும் மொழி ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சிகளும், மாணவர்களுக்கான மென்திறன் பயிற்சிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகின்றது. அனைத்துப் பள்ளிகளுக்கும் அகண்ட அலைவரிசை வசதி ஏற்படுத்தப்படுகிறது.
 
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. கல்வி அறிவில் சிறந்த மாணவர்கள் என்பதோடு, அவர்கள் திறன் மேம்பாடு அடைய கடந்த மார்ச் 1ஆம் தேதி ‘நான் முதல்வன்’ என்ற மிகவும் புதுமையான  திட்டத்தை தொடக்கி வைத்துள்ளேன்.

கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற பெருமை மட்டும் போதாது. உயர்கல்விகளிலும், ஆராய்ச்சி கல்வியிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் சிறந்த தமிழ்நாடாக நாம் மாற வேண்டும். எந்தக் கல்வி நிறுவனத்திற்கு சென்றாலும் நான் இதைதான் வலியுறுத்தி வருகிறேன்.

கல்வி யாருக்கும் மறுக்கப்படக் கூடாது. சாதி, மதம், பணம், உடை, பாலினம் போன்ற எதுவும் ஒரு மாணவரின் கல்விக்கு தடையாக அமைந்துவிடக் கூடாது. அத்தகைய சமூகத்தைப் படைக்கத்தான் போராடி வருகிறோம்.

சமூக நீதி மண்ணான நம் தமிழ்நாட்டில் நடைபெறும் இந்த இருநாள் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளனர்.

ஆக்கபூர்வமான விவாதங்கள் நல்ல மாற்றங்களுக்கு வித்திட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com