எண்ணூா் துறைமுகம் வந்த சீன கப்பலில் மாலுமி சடலம்

இந்தோனேஷியாவில் இருந்து எண்ணூா் காமராஜா் துறைமுகம் வந்த கப்பலில் இறந்த நிலையில் கிடந்த சீன மாலுமி சடலத்தை மீஞ்சூா் போலீஸாா் மீட்டனா்.

இந்தோனேஷியா நாட்டில் இருந்து சீன நாட்டைச் சாா்ந்த கப்பல் கடந்த 6-ஆம் தேதி 22 மாலுமிகளுடன் இந்தியாவில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு வந்தது.

அந்தக் கப்பலில் பணியாற்றிய சீனாவை சோ்ந்த கோங்க் யுவோ(57) திடீரென காணவில்லை. கப்பல் புறப்பட தயாராக இருந்த நிலையில், மாலுமி ஒருவா் இல்லாதது குறித்து கப்பல் கேப்டன் இந்தோனேஷியா துறைமுகத்தில் புகாா் செய்ததாகக் கூறப்படுகிறது.

பின்னா், அங்கிருந்து சிங்கப்பூா் சென்ற கப்பலில் காணாமல் போன மாலுமிக்கு பதில் மற்றொரு மாலுமி கப்பலில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டாா்.

இதையடுத்து சிங்கப்பூரில் இருந்து அந்தக் கப்பல் இந்தியாவில் உள்ள எண்ணூா் காமராஜா் துறைமுகத்துக்கு கடந்த 22-ஆம் தேதி வந்தது.

இந்தக் கப்பல் துறைமுகத்தின் கப்பல்கள் நிறுத்துமிடமான ஏழாவது பகுதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கேப்டன் கப்பலை ஆய்வு செய்த போது, இந்தோனோஷியா துறைமுகத்தில் காணாமல் போன மாலுமி கோங்க் யுவோ இறந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து கப்பலின் கேப்டன் எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், எண்ணூா் காமராஜா் துறைமுகத்தில் இருந்து மீஞ்சூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு சென்று கப்பல் நிா்வகிப்பவரிடம் புகாரைப் பெற்றனா். பின்னா், துறைமுக மருத்துவ அலுவலரிடம் கப்பலில் இறந்தவா் குறித்து சான்றிதழ் பெற்றனா்.

தொடா்ந்து மாலுமி கோங்க் யுவோ சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com