சில்லரை வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக செயற்கை நுண்ணறிவு கொண்ட புதிய வகை ஸ்போடி ரோபோவை பெங்களூரைச் சேர்ந்த இன்வென்டோ ரோபோடிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பல நிறுவனங்களில் இப்போது ரோபோக்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. வரவேற்பாளர்கள், மனிதவள நிர்வாகிகள் மற்றும் கல்லூரிகளில் வழிகாட்டிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
இந்த தொழில்நுட்ப புரட்சியில் பெங்களூரைச் சேர்ந்த இன்வென்டோ ரோபாடிக்ஸ் முன்னிலை வகிக்கிறது. தற்போது சீனாவை முன்மாதிரியாகக் கொண்டு சில்லரை வணிக நிறுவனங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக முதல்முறையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட புதிய வகை ஸ்போடி ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை வாடிக்கையாளர்களை வரவேற்பது முதல், விரும்பும் பொருளை தேடித் தருவது, அதன் பயன்பாடு முறையை விளக்குவது, அடுத்த பொருள் இருக்கும் இடத்துக்கு வழிகாட்டுவது என அவர்களது தேவைகளை அறிந்து செயல்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வர்த்தகத்தை நோக்கி அனைவரும் சென்றுகொண்டிருக்கையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை மீண்டும் நிறுவனங்களின் பக்கம் திருப்பவே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்வென்டோ ரோபோடிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பாலாஜி விஸ்வநாதன் தெரிவித்தார்.