கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் கரோனா தடுப்பூசி விவரம் குறித்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, ஆன்லைன் டேட்டிங் செயலிகளில் டேட்டிங்கிற்கு நீங்கள் தேர்வு செய்யும் நபர், கரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளாரா என்பதை தெரிந்துகொண்டு தேர்வு செய்ய முடியும்.
கரோனா தடுப்பூசி நிலைகளின் அடிப்படையில் டேட்டிங் செய்யும் நபரை தேர்வு செய்ய இந்த செயலிகள் அனுமதித்துள்ளன. தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவரை தேர்வுசெய்யும்போது இருவரின் பாதுகாப்பும் ஓரளவு உறுதி செய்யப்படும் என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது.
டிண்டர், ஓகே க்யூபிட், பம்பிள் மற்றும் காபி மீட்ஸ் பேகல் போன்ற டேட்டிங் செயலிகள் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களின் தகவல்களை வெளியிடுகின்றன.
லண்டனை தளமாகக் கொண்ட எலேட் டேட் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுடன் டேட்டிங் செல்ல விரும்பவில்லை என்று 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் கூறியுள்ளனர்.
'கரோனா தடுப்பூசியில் ஆர்வமில்லை' என்று கூறியவர்களைவிட 'கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக' கூறுபவர்களை டேட்டிங் செய்யவே பலர் விரும்புவதும் கண்டறியப்பட்டுள்ளது.
டேட்டிங் செயலியில் தங்களுடைய சுயவிவரங்களில் கரோனா தடுப்பூசி குறித்த கேள்விக்கு பயனர்கள் பதில் அளித்து விவரங்களை அப்டேட் செய்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.