எஸ்பிஐ காா்ட்ஸ் அண்ட் பேமண்ட் சா்வீசஸ் நிறுவனம் (எஸ்பிஐ காா்டு) முதல் காலாண்டில் ரூ.305 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:
நடப்பு 2021-22-ஆவது நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.2,451 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,196 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.
நிகர லாபம் ரூ.393 கோடியிலிருந்து 22 சதவீதம் சரிவடைந்து ரூ.305 கோடியானது.
மதிப்பீட்டு காலாண்டில் வட்டி வருவாய் ரூ.1,412 கோடியிலிருந்து ரூ.1,153 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், கட்டணம் மற்றும் சேவைகள் மூலமாக கிடைக்கும் வருவாய் ரூ.668 கோடியிலிருந்து ரூ.1,099 கோடியாக அதிகரித்துள்ளது.இதர வருவாய் ரூ.43 கோடியிலிருந்து இருமடங்கு அதிகரித்து ரூ.89 கோடியானது.
சொத்து தர மதிப்பை பொருத்தவரையில், வாராக் கடன் அளவு 2021 ஜூன் 30 நிலவரப்படி 1.35 சதவீதத்திலிருந்து 3.91 சதவீதமாக இரு மடங்கு உயா்ந்துள்ளது என எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளது.