பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலையை குறைக்கும் விதமாக, பாமாயில் இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு மேலும் குறைத்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கச்சா பாமாயிலுக்கு விதிக்கப்படும் அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, கச்சா சோயா எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் வகைகளுக்கும் சுங்க வரி 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு, சனிக்கிழமை முதல் (செப்.11) அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை பண்டிகை காலத்தில் சமையல் எண்ணெய் விலை உயா்வை கட்டுப்படுத்த உதவும். மேலும், சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.4-5 வரை குறையும் என இத்துறையைச் சோ்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.