பங்குச் சந்தையில் பட்டியலாகியுள்ள நிறுவனங்கள் கடன்பத்திர வெளியீடுகள் மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.5.88 லட்சம் கோடியை திரட்டியுள்ளன.
இதுகுறித்து பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நிறுவனங்கள் தங்களின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவையான நிதியை கடன்பத்திரங்கள் மூலம் திரட்டுவதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் கடன்பத்திர விற்பனையின் மூலம் ரூ.5.88 லட்சம் கோடியை திரட்டின. இது, ஆறு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.
மேலும், முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டில் இந்நிறுவனங்கள் வரலாற்று சாதனை அளவில் திரட்டிய ரூ.7.72 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் கடன்பத்திர வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட தொகை 24 சதவீதம் குறைவு.
இதற்கு முன்பு, கடந்த 2015-16-ஆம் நிதியாண்டில் பட்டியலான நிறுவனங்கள் மிகவும் குறைந்தபட்சமாக ரூ.4.58 லட்சம் கோடியை திரட்டிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கிகள் குறைந்த வட்டியில் வேகமாக கடனுதவி வழங்கியது மற்றும் பங்குகளின் சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவே நிறுவனங்கள் தனிப்பட்ட வகையில் கடன்பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டுவது கணிசமான அளவில் குறைந்து போனதாக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.