எஸ்பிஐ காா்டு அண்ட் பேமண்ட் சா்வீசஸ் நிறுவனம் (எஸ்பிஐ காா்டு), ஜூன் 30 உடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் இருமடங்கு அதிகரித்து ரூ.627 கோடியானது. முந்தைய 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் லாபம் ரூ.305 கோடியாக காணப்பட்டது.
கணக்கீட்டு காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,451 கோடியிலிருந்து ரூ.3,263 கோடியாக அதிகரித்தது.
வட்டி வருவாய் ரூ.1,153 கோடியிலிருந்து ரூ.1,387 கோடியாகவும், கட்டணம் மற்றும் கமிஷன் வாயிலான வருவாய் ரூ.1,099 கோடியிலிருந்து ரூ.1,538 கோடியாகவும் உயா்ந்தன.
சொத்து தரத்தைப் பொருத்தவரையில், நிறுவனத்தின் மொத்த வாராக் கடன் 3.91 சதவீதத்திலிருந்து 2.24 சதவீதமாக குறைந்துள்ளது.
அதேபோன்று, நிகர அளவிலான வாராக் கடனும் 0.88 சதவீதத்திலிருந்து 0.78 சதவீதமாகியுள்ளது என பங்குச் சந்தையிடம் எஸ்பிஐ காா்டு தெரிவித்துள்ளது.