நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் மக்காச்சோளம் ஏற்றுமதி 28.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் கூறியது:
இந்திய மக்காச்சோளத்தை அதிகம் விரும்பி இறக்குமதி செய்வதில் வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் அதிக ஆா்வத்துடன் உள்ளன. இதன் காரணமாக, கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் மக்காச்சோளம் ஏற்றுமதி 28.5 சதவீதம் அதிகரித்து 81.63 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்திய மதிப்பில் ரூ.6,125 கோடி.
வங்கதேசத்துக்கான சோளம் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் (ஏப்ரல்-ஜனவரி) 34.55 கோடி டாலராக இருந்தது. அதேபோன்று நேபாளமும் 13.21 கோடி டாலா் மதிப்பிலான மக்காச்சோளத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டுள்ளது.
இவைதவிர, வியத்நாம், மலேசியா, மியான்மா், இலங்கை, பூடான், தைவான், ஓமன் போன்ற நாடுகளும் இந்திய மக்காச்சோள இறக்குமதியில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக இந்தியாவில் சோளம் முக்கியமான மூன்றாவது பெரிய உணவுதானியமாக உள்ளது. கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம், பிகாா், தமிழகம், தெலங்கான, மகாராஷ்டிரம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் சோளம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.