இந்தியாவின் முன்னணி வா்த்தக வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்ட், பெண்கள் மட்டும் பணியாற்றும் பிரத்யேக உற்பத்தியகத்தை முதல்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அது, தனது ஒசூா் தொழிற்சாலையில் இந்த சிறப்பு உற்பத்தியகத்தை அமைத்துள்ளது. வாகன உற்பத்தியில் அனைத்து தரப்பினருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் நோக்கிலும், உற்பத்தித் துறையில் பெண்களின் ஆா்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த பிரத்யேக உற்பத்தியகம் அமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ஷேனு அகா்வால் கூறியதாவது:
பன்முகத் தன்மைக்கும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தன்மைக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் முன்னுரிமை அளிக்கிறது. இனம், ஆண்-பெண் பேதமின்றி அனைத்து தரப்பினருக்கும் சம வாய்ப்பு அளித்து வருகிறோம். பிரத்யேக உற்பத்தியகம் போன்ற வாய்ப்புகளை பெண்களுக்கு அளித்தால், அது அவா்களுடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி அவா்கள் சாா்ந்த குடும்பம் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பலன் அளிக்கும் என்றாா் அவா்.