தமிழகத்தில் மதுரைப் பகுதிக்கு சுற்றுப் பிரயாணம் மேற்கொள்கையில் அங்கு கோவணத்துடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவரைக் கண்டு, இங்கு விவசாயிகள் உடுத்த உடையின்றி வறுமையில் வாடிக் கொண்டிருக்கையில் எனக்கு எதற்கு கோட்டும், தலைப்பாகையும், நீண்ட வேஷ்டியும் என்று ஆற்றாமையுடன் அவற்றைக் கழற்றி விட்டு இடையில் ஒரு துண்டும், உடலுக்கு ஒரு மேல் துண்டுமாகத் தமது ஆடை அணியும் விதத்தை மாற்றிக் கொண்டார் அண்ணல் காந்தி. அன்று முதல் அவரை எவரொருவரும் அரையாடை மனிதராகவே காண வாய்த்தது. இந்தியாவில் பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டங்களானாலும் சரி லண்டன் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதானாலும் சரி காந்திஜி அணிவது இந்த அரையாடையை மட்டுமே. மனிதர்கள் அவர்களது இயல்புகளுக்காக மதிக்கப்பட வேண்டுமே தவிர அவர்கள் அணியும் உடைகளுக்காக அல்ல என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார் காந்தி.