
கடைசியில் பூரண ஸ்வராஜ்யத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது என்று மகாத்மா காந்தி இன்று மாலை பிரார்த்தனை கூட்டத்தில் கூறினார்.
காந்திஜி கூறியதாவது:
இன்னும் பூரண சுதந்திரம் வந்தாகவில்லை. நமது முடிசூடா மன்னர் ஜவாஹர்லால் நேருவும் இடைக்கால சர்க்காரில் பதவியேற்றிருக்கும் அவரது சகாக்களும் ஜனங்கள் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கும் உண்மையான சேவையை செய்வார்களானால் பூரண சுதந்திரம் வந்து விடும்.
தண்டி யாத்திரை உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். அந்த உன்னதமான போராட்டத்தில் இந்தியப் பெண்கள் முன்பு எந்த சமயத்திலும் இல்லாத அளவுக்கு விழிப்படைந்துவிட்டார்கள். அந்த நாளில் அவர்களது தியாகத்தையும் வீரத்தையும் கண்டேன். கஷ்டப்படும் பாமர மக்களுக்கு சுதந்திரம் பெறுவது என்று காங்கிரஸ் எடுத்துக் கொண்ட பிரதிக்ஞையின் சின்னமே அந்த யாத்திரை. வரியில்லாமல் உப்பு எடுக்க அனுமதிக்க வேண்டும் என்பதே அப்போது எழுப்பிய பிரச்னை. எனவே உப்பு வரியை அறவே நீக்குவது புது சர்க்காரின் முதல் வேலைகளில் ஒன்றாக இருக்கவேண்டும்.
உப்பு வரியை ரத்து செய்வது மாதிரி வகுப்பு செüஜன்யத்தை ஒரு கணத்தில் ஏற்படுத்திவிட முடியாது. மந்திரிகள் அதற்காக உயிர் வாழ வேண்டும்.அதற்காக உயிரையும் அர்ப்பணம் செய்யத் தயங்கக்கூடாது. தீண்டாமையை அடியோடு அகற்றவும் கதரைப் பரப்பவும் காங்கிரஸ் தலைவர்கள் பிரதிக்ஞை செய்து கொண்டிருக்கிறார்கள். எனது பங்கி சகாக்கள் படும் அவதியைப் போக்கவேண்டும் என்பதற்காக நான், பிரிட்டிஷ் சர்க்காரின் பிரதிநிதி என்ற முறையில் வைசிராயிடம் போக வேண்டியிருந்தது. சமூகத்திலிருந்து இந்த மாசை அகற்றும்படி இனி நான் இடைக்கால சர்க்காரைக் கேட்டுக்கொள்ளவேண்டும். பங்கிகள் வசிக்கும் சேரிகளை அவர்கள் பார்க்கட்டும்.
தினமணி (03-09-1946)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.