மனித இனமே காரணம்...

ஆரம்ப கால கட்டங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையான உணவை காட்டிற்குள்ளே சென்று சேகரித்தான்.
Updated on
2 min read

ஆரம்ப கால கட்டங்களில் மனிதன் தன்னுடைய அன்றாடத் தேவையான உணவை காட்டிற்குள்ளே சென்று சேகரித்தான். அதேபோல, இன்று காட்டிலுள்ள வன விலங்குகள் தங்களுடைய அவசியமான உணவிற்காக மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த இழிவான நிலையினை உருவாக்கியது பேராசை கொண்ட மனித இனம் தான். இறைவன் மனிதனைத் தவிர, அனைத்து விலங்குகளுக்கும் ஐந்து அறிவினை படைத்து, மனிதனுக்கு மட்டும் ஆறாம் அறிவினை கொடுத்ததின் விளைவுதான் இந்த நிலை. மனித இனம் தன்னுடைய சுகபோக வாழ்க்கைக்காக, காட்டிலுள்ள அனைத்து இயற்கை வளங்களையும் தன் வசமாக்கி விட்டதினால் வந்த விளைவுதான் இந்த வனவிலங்குகள் படையெடுப்பு. வனங்கள் அழிந்து விட்டதால், வனவிலங்குகள் தங்களுடைய இரைக்காக வேறுவழியின்றி உணவு இருக்கும் இடத்தினை நோக்கி படையெடுக்கின்றன. வனவிலங்குகள் ஒரு முறை வந்து பழகிவிட்டால், அவை மீண்டும், மீண்டும் அதே பகுதிக்கு வரத்தான் செய்யும். என்னதான் நாம் தடைகளை ஏற்படுத்தினாலும், ஏதாவது ஒரு வழியில் உள்ளே வரத்தான் செய்யும். மனித இனம் தன்னுடைய வாழ்க்கைக்கு தேவையான வளங்களை மட்டும் எடுத்து இருந்தால் கண்டிப்பாக இந்த நிலை ஏற்பட்டிருக்காது. அதனை மீறி அனைத்து இயற்கை வளங்களையும் அழித்து, அதனை பணமாகவும் விலையுயர்ந்த பொருள்களாகவும் மாற்றியதால்தான் வந்தது இந்த நிலை. இந்த பணமும் விலையுயர்ந்த பொருள்களும் மக்களின் பசியினை பூர்த்தி செய்ய முடியாது.

வியாபாரி ஒருவர் தன்னுடைய பொருள்களை தொலைவிலுள்ள சந்தைக்கு விற்க சென்றுள்ளார். போகும் வழியில் பாலைவனப் பகுதியினை கடந்து செல்ல வேண்டும். வியாபாரி தான் மட்டும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்ததால், மற்ற வியாபாரிகளிடம் சரிவர பழகுவதில்லை. வியாபாரி நீண்ட பயணத்திற்கு பின்பு சந்தையை அடைந்தார். பொருள்களை விற்று பணமாகவும் மற்றும் அணிகலன்களாகவும் மாற்றிக் கொண்டார். ஏனென்றால் அணிகலன்களுக்கும், பணத்திற்கும் நல்ல மதிப்பு வியாபாயின் சொந்த ஊரில் இருந்தது. அதனால் அவரது மனமுழுவதும் பணம் மற்றும் அணிகலன்களை வாங்குவதிலேயே இருந்தது. இந்த மிகப்பெரிய சந்தோஷத்தில் தனக்கும், தான் கொண்டுவந்த ஒட்டகத்திற்கும் உணவளிக்க மறந்து விட்டார். தன்னிடம் உள்ள பணத்தினால் ஊரில் நிறைய நிலங்களை வாங்கிவிடலாம் என்ற எண்ணம் மேலோங்கி நின்றது. வியாபாரத்தினை முடித்து விட்டு, தன்னுடைய சொந்த கிராமத்திற்கு புறப்படுகின்றார். வரும் வழியில் பெரும் புயல் ஏற்பட்டு, திக்குமுக்காடி விடுகிறார். ஒட்டகமும் வழி தவறிச் சென்று விட்டது.

புயல் முடிந்ததும் பயணத்தினை ஆரம்பிக்கிறார். சிறிது தூரம் சென்றவுடன், பசியெடுக்க ஆரம்பிக்கின்றது அத்துடன் குடிநீருக்காக நாவும் ஏங்குகின்றது. கையில் இருப்பதோ பணம் மற்றும் ஆபரணங்கள்தான். அப்பொழுதுதான் வியாபாரிக்கு மனதில் எண்ணம் ஏற்படுகின்றது. ஐயோ, பணம் மற்றும் பொருள்களின் மீதுள்ள பற்றினால் உணவுப் பொருள்கள் மற்றும் குடிநீர் எடுத்துவர மறந்து விட்டேனே என நினைத்து அழுகிறான். அப்பொழுதுதான் அவருக்கு அந்தப்பணம் வெற்றுக் காகிதமாகத் தெரிகிறது. ஆபரணங்களும் தன்னுடைய பசியினை போக்க முடியாமல் போய்விட்டதே எண எண்ணி வருந்தி தன்னுடைய உயிரை விடுகின்றார். இந்தக் கதை அந்தக் காலத்திற்கு மட்டுமல்லாமல் எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைகின்றது.

சற்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்திற்கு தொடர்ந்து விடாமல் பெய்த மழையினால் விவசாய நிலங்களில் உருவாகியுள்ள அனைத்துப்பொருள்களையும் அழிந்து விட்டால் நம்முடைய நிலைமையை எண்ணிப்பார்க்க வேண்டும். அதே போல் தொடர்ந்து பல வருடங்களாக மழை பெய்யாமல் பொய்த்து விட்டால், உணவுப்பொருள்களுக்கும் மற்றும் குடிநீருக்கும் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு பஞ்சம் வந்தால் வியாபாரிக்கு ஏற்பட்ட அதே நிலைதான் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும். பணம் அந்த நிலையில் வெறும் அச்சடித்த காகிதமாகத்தான் தெரியும். அதனுடைய மதிப்பினை இழந்து விடும். இந்த பரந்த உலகில் அனைத்து உயினங்களுக்கும் வாழ உரிமை மற்றும் தகுதியிருக்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com