

விஜயன் – வடிவுக்கரசி ஜோடியாக நடிக்கும் ‘ஊஞ்சல்’ என்ற வண்ணப்படத்தை ஸ்ரீசுவாமி எண்டர்பிரைசார் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஈரோடுக்கு அருகிலுள்ள ஊஞ்சலூரிலும் கொடுமுடியிலும் நடைபெற்றது. அந்தப் பகுதியில் இதுவரை படைப்பிடிப்பே நடந்ததில்லை. தினமும் கிராமத்து மக்கள் வண்டி கட்டி வந்தபடி இருந்தார்கள். முதல் நாள் படப்பிடிப்பின் போது பதினைந்தாயிரம் மக்கள் கூடி இருந்தனர். படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள் இருந்தன.
சுமதியைக் காதலிக்கும் இளம் வாலிபராக சுந்தர் இப்படத்தில் நடித்து வருகிறார். சுமதி, சுந்தர் இருவரும் ஆடிப் பாடிய காதல் காட்சி, கொடுமுடி காவிரிக் கரையில் படமாக்கப்பட்டது.
படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது கவுண்டமணியைத் தேடி ஒரு இளம் கிராமத்துப் பெண் வந்தாள். அவள் தன்னை கவுண்டமணியின் ரசிகை என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள். தினமும் படப்பிடிப்புக்கு வந்திருந்த அந்தப் பெண், கவுண்டமணி தன் வேலையை முடித்துவிட்டு சென்னை திரும்பியதை அறியாமல் கவுண்டமணியைத் தேடினாள். அவரைக் காணாது அவள் கண்ணீர் விட்டபடி படப்பிடிப்பு குழுவினரிடம் விசாரித்தார். அப்போதுதான் அவர் கவுண்டமணியைக் காதலித்து வந்த விஷயம் தெரிய வந்தது. தயாரிப்பாளர் ஏ.பி.சுவாமி இதை அறிந்து அந்தப் பெண்ணைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பதினைந்து நாட்கள் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துத் திரும்பியுள்ள யூனிட்டார் இம்மாத இறுதியில் அடுத்த கட்டப் படப்பிடிப்பைத் தொடுங்குகின்றனர்.
மனோரமா, காந்திமதி, கல்லாப்பெட்டி சிங்காரம் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தின் கதையை எழுத்தாளர் அய்க்கண் எழுதியுள்ளார். கண்ணதாசனின் பாடல்களுக்கு ஷியாம் இசையமைக்க, ஏ.பி.சுவாமி தயாரிக்கும் இப்படத்திற்கு திரைக்கதை வசனத்தை எழுதி, டைரக்ட் செய்யும் பொறுப்பை ஆர்.சி.சக்தியிடம் அசோசியேட்டாகப் பணியாற்றிய எஸ்.கியாவுதீன் ஏற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.