நீ ஏன் அழிந்த கோலமானாய்?

வானத்திலிருந்தல்ல பூமியிலிருந்து உதிர்ந்த புதுமை நட்சத்திரமே!
நீ ஏன் அழிந்த கோலமானாய்?
Updated on
1 min read

வானத்திலிருந்தல்ல

பூமியிலிருந்து

உதிர்ந்த

புதுமை நட்சத்திரமே!

உதயங்கள் உன்னுடன்

ஒப்பந்தம் செய்யும் வேளையில்

நீயேன்

அஸ்தமனத்திடம் போய்

அடைக்கலம் கேட்டாய்?

பூவிரல்களால்

எம் இதய வாசலில்

அழியாத கோலங்கள்

போட்டுவிட்டு

நீயேன்

அவசர அவசரமாய்

அழிந்த கோலமானாய்?

எத்தனையோ

இளைஞர்களின்

கனவில் வந்தவளே!

எவருஐய கனவிலாவது – உன்

சோகக் கதையைச்

சொல்லியிருக்கக் கூடாதா?

வேலியைத் தாண்டியிருந்தால்

ஒருவேளை

வெள்ளாடு

பிழைத்திருக்கலாம்.

வாழ்வதற்கு

ஒரு வீடு

தேடியபோது

பொல்லாத

ஒரு உலகம்

உலகத்திலிருந்தே

உன்னை வழியனுப்பி

வைத்ததோ?

நிழல் நிஜமாகிறது

என்று நினைத்தாய்

அப்பாவிப் பெண்ணே!

நிஜம் நிழலானதாலா

மரணத்தை அணைத்தாய்?

துன்பம்

பெண்குலத்தின்

தொடர்கதை

அதில்

நீயும்

விடைதெரியாமல்

போன ஒரு

விடுகதை

(மு.மேத்தா எழுதிய ‘அவர்கள் வருகிறார்கள்’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com