

நகைச்சுவையில் தனக்கென்று ஒரு உயர்ந்த இடத்தைப் பெற்று இருப்பவர் திருமதி டி. பி.முத்து லட்சுமி. அவருடன் ஒரு பேட்டி:
ஜெமினியின் "சந்திரலேகா" எடுத்த போது நானும் அங்கு இருந்தேன். அந்தப் படத்திற்காக ட்ரம் டான்ஸ், ஜிப்ஸி டான்ஸ் எல்லாம் கற்றுக் கொடுத்தார்கள். அதில் என் நடிப்பு சிறப்பாகவே அமைந்திருந்தது.
இந்த சமயத்தில் மாடர்ன் தியேட்டரஸ்காரங்க அவங்க படத்தில் நடிக்க அழைத்தனர். ஹாஸ்ய நடிகை பாத்திரம் தந்தாங்க. சுமார் நாற்பது படங்களில் நடித்தேன். பிறகு ஏ .வி.எம் எடுத்த படங்களில் நடித்தேன். அப்போ நடித்தவங்க எல்லாம் ரொம்ப திறமையா நடிப்பாங்க. ஒரே குடும்பத்தைப் போல ஒரு உணர்வு இருக்கும். என் நடிப்பைப்பார்த்துவிட்டு திரு. என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் என் வீட்டுக்கு வந்து பாராட்டினார். அப்போது எனக்கு அவரை அதிக அறிமுகம் இல்லை. என் வீட்டு கிரகப்பிரவேசத்தில் அவர் "எங்கள் வாரிசு இவள்; உயர்வாக இருக்க வேண்டும் "என்று வாழ்த்தியதை மறக்க மாட்டேன்.
நாடோடி மன்னன்' படத்தில் நடித்தேன். அதில் என்னுடைய பாகம் 'புருஷன் புருஷன்' என்று தவம் செய்வது.எம்.ஜி.ஆர் அவர்கள் சொல்வார்கள், "நீ இப்படி புருஷன் தவம் பண்ற? இந்தப் படம் முடிவதற்குள் பார், உனக்கு கல்யாணம் ஆகி விடும் என்று!
அவர் வாக்கு பலித்து விட்டது.அந்தப் படம் முடிவதற்குள் எனக்கு திருமணம் நடந்து விட்டது.
பொதுவாக நடிக்க யாரை முன்னணியாக கொண்டிருக்கிறீர்கள்?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அவங்க கதையின் சூழ்நிலையைச் சொன்னதும் அதற்குப் பொருத்தமா செய்யனும் எனபதுதான் எண்ணம். இதனால் அநேகமாக என் நடிப்பு ஒரிஜினலாகத்தான் இருக்கும்.
நகைச்சுவை நடிப்பில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தியது யார்?
கலைவாணர்தான்.
பேட்டி: குயிலி ராஜேஸ்வரி.
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.